கடந்த சில வருடங்களாகக் கிடப்பில் இருந்த காப்பீடு மசோதா (அந்நிய நேரடி முதலீட்டை 26 சதவீதத்திலிருந்து 49 சதவீதமாக உயர்த்தும் மசோதா) சில நாட்களுக்கு முன்பு மாநிலங்களவையில் நிறைவேறியது. இந்த நிலைமையில் இந்தியா பர்ஸ்ட் லைப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ஆர்.எம்.விஷாகா சில நாட்களுக்கு முன் சென்னை வந்திருந்தபோது சந்தித்தோம்.

அந்த சந்திப்பில் காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டை உயர்த்தியது மற்றும் இவரது வேலை – குடும்பம் சமன்பாடு உள்ளிட்ட பல விஷயங்களை பேசினோம். அவருடனான உரையாடலிலிருந்து…

பெங்களூரூவில் பள்ளிப்படிப்பும், ஹைதராபாத்தில் செயின்ட் பிரான்ஸிஸ் கல்லூரியில் பி.காம் பட்டமும் படித்தவர். பிறகு சி.ஏ. முடித்து த நியூ இந்தியா இன்ஷூ ரன்ஸ் நிறுவனத்தில் உதவி மேலாளராக சேர்ந்தார். அதற்கு பிறகு பிர்லா லைப் இன்ஷூரன்ஸ், ஐடிபிஐ பெடரல், கனரா ஹெச்எஸ்பிசி ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் உள்ளிட்ட பல காப்பீடு நிறுவனங்களில் பணிபுரிந்தவர். தற்போது இந்தியா பர்ஸ்ட் லைப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்றிருக்கிறார். காப்பீட்டுத் துறையில் இருக்கும் ஒரே பெண் தலைமைச் செயல் அதிகாரி இவர்தான்.

பாதுகாப்புக்கு ஒரு டேர்ம் இன்ஷூரன்ஸ், முதலீட்டுக்கு சில மியூச்சுவல் பண்ட்கள். நிதித் திட்டமிடலுக்கு இவை போதும் என்பதுதான் பெரும்பாலான நிதி ஆலோகர்களின் கருத்தாக இருக்கிறது. இப்படி இருக் கையில் யூலிப், என்டோவ்மென்ட் உள்ளிட்ட திட்டங்களுக்கான தேவை என்ன?

வாடிக்கையாளர்களைப் பொறுத்துதான் முதலீட்டுத் திட்டங்களை தேர்வு செய்ய முடியும். மியூச்சுவல் பண்ட்கள் அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. மேலும் ஒவ்வொருவராலும் தங்களது தேவைக்கு ஏற்ப பிரித்து திட்டமிட முடியாது. அதனால்தான் குழந்தைகளுக்கான பாலிசி, ஓய்வுகால திட்டம் என்று பிரித்து வைத்திருக்கிறோம். எங்களிடம் இருக்கும் அனைத்து பாலிசிகளும் தேவையை பொறுத்துதான் இருக்கிறது. வாடிக்கையாளர்கள் தங்களது தேவைக்கு ஏற்ப முதலீடு செய்கிறார்கள்.

நீங்கள் சொல்வது பொதுவான முதலீட்டு முறை. அதிலிருந்து தங்களது தேவைக்கு ஏற்ப பிரித்து முதலீடு செய்ய நிதி சம்பந்தமான விழிப்புணர்வு மற்றும் நிதி ஒழுங்கும் தேவை. இந்தியாவில் நிதி சார்ந்த விழிப்புணர்வு குறைவு என்பதால் இதுபோன்ற திட்டங்களை வைத்திருக்கிறோம். ஒருவேளை உங்களுக்கு நிதித் திட்டமிடல், நிதி சார்ந்த சிந்தனை இருக்கும்பட்சத்தில் இங்கு வர வேண்டாம். வெளிநாட்டவர்களுக்கு நம்ம ஊர் புடவை தேவைப்படாது. அதற்காக புடவையே தேவை இல்லை என்ற முடிவுக்கு வரத் தேவையில்லை.

இருந்தாலும் வாடிக்கையாளர்களின் தேவையைப் புரிந்து கொள்ளாமல் ஏஜென்டுகள் பாலிசியை விற்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் இருக்கிறதே?

காலம் மாறிக்கொண்டே இருக்கிறது. சில பத்தாண்டுகளுக்கு முன்பு காப்பீடு எடுத்தவர்கள் பெரும்பாலும் வரிச் சலுகைக்காக எடுத்தார்கள். அப்போது யாரும் தாமாக முன்வந்து காப்பீடு எடுத்த தில்லை. ஆனால் இன்று ஆன் லைன் மூலமாக பாலிசி எடுக்கும் அளவுக்கு வாடிக்கையாளர்கள் தங்களது தேவையை தெளிவாக புரிந்து வைத்திருக்கிறார்கள்.

தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் பெரும்பாலும் நகரங்களில்தான் கவனம் செலுத்துகிறார்கள் என்ற பொதுவான குற்றச்சாட்டும் இருக்கிறதே?

மற்ற நிறுவனங்களைப் பற்றி நான் கருத்து கூற முடியாது. ஆனால் எங்களது நிறுவனத்தை எடுத்துக்கொண்டால் பெரும் பாலான பாலிசிகள் சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் இருந்துதான் எடுக்கப்படுகிறது. பேங்க் ஆப் பரோடா மற்றும் ஆந்திரா வங்கி ஆகிய நிறுவனங் கள் இணைந்துதான் இந்தியா பர்ஸ்ட் லைப் நிறுவனம் ஆரம்பிக் கப்பட்டதால், இந்த வங்கிகளின் 7,000 கிளைகளில் இருந்தும் எங்களுக்கு வாடிக்கையாளர்கள் கிடைக்கிறார்கள்.

சமீபத்தில் காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீடு மசோதா நிறைவேற் றப்பட்டது? உங்களது நிறுவனத் திலும் அந்நிய முதலீடு உயர்த்தப் படுமா?

எங்களுக்கு நிதித் தேவைப்படும் போது, பங்குதாரர்களின் அனுமதி யோடு உயர்த்திக் கொள்வோம். இப்போதைக்கு எந்த உறுதியான திட்டமும் இல்லை. ஆனால் இது நிச்சயம் வரவேற்கத்தகுந்தது. மேலும் இப்போதுதான் மசோதா நிறைவேறி இருக்கிறது. இதில் இருக்கும் நுணுக்கமான விஷயங் களை நாங்கள் பார்க்கவேண்டும்.

கிளைம் வழங்கும் விகிதத்தில் உங்கள் நிறுவனம் முன்னிலையில் இல்லையே?

2009-ம் ஆண்டுதான் எங்கள் நிறு வனம் ஆரம்பிக்கப்பட்டது. நாங் கள் இப்போதுதான் வளர்ந்து வருகி றோம். எங்களுடைய கிளைம் விகி தம் 87% உள்ளது. வளர்ந்து வரும் நிறுவனத்தில் கிளைம் அதிகமாக இருந்தாலும் நாங்கள் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறோம்.

ஆன்லைன் பாலிசி விற்பனை எப்படி இருக்கிறது?

எங்கள் நிறுவனத்தில் ஆன் லைன் மூலம் பாலிசி வாங்க முடியும். ஆனால் இப்போதைக்கு அதில் நாங்கள் கவனம் செலுத்துவ தில்லை. அதற்காக நாங்கள் விளம் பரம் செய்வதில்லை. அனைத்து விஷயங்களையும் ஒரே சமயத்தில் செய்ய முடியாது. உடனடியாக கண்ணுக்கு தெரிய கூடிய வாய்ப்புகளை பயன்படுத்துவதில் மட்டும் கவனமாக இருக்கிறோம்.

ஏஜென்டுகளை இன்ஷூரன்ஸ் நிறு வனங்களே நியமித்து கொள்ளலாம், கமிஷனை நீக்கிவிட்டு சம்பளம் கொடுக்கலாம் என்று ஐஆர்டிஏ தெரிவித்துள்ளதே?

இது வரவேற்கத்தக்கது. மேலும் எங்களுக்கு பொறுப்பு அதி கரித்துள்ளது. ஏதாவது தவறு நடக்கும் பட்சத்தில் அது இன்ஷூ ரன்ஸ் நிறுவனங்களைத்தான் பாதிக்கும். அதனால் தரமான ஆட் களைத் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

சம்பளம் விஷயத்தில் உறுதியான முடிவு ஏதும் எடுக்கவில்லை.

நீங்கள் லாப பாதைக்கு திரும்பி விட்டீர்களா?

இப்போதுதான் சிறிய அளவில் லாபம் அடைந்திருக்கிறோம். விரைவில் இது குறித்து முறையாக அறிவிப்போம்.

காப்பீட்டுத் துறையில் நிறுவனங்கள் இணைய வாய்ப்பு இருக்கிறதா?

இப்போதுதான் அந்நிய முதலீட் டுக்கு அனுமதி கிடைத்திருக்கிறது. அதனால் நிறுவனங்கள் விரிவாக் கப்பணிகளில் இருப்பதைத்தான் விரும்புவார்கள். குறைந்தபட்சம் 2020 வரைக்கும் காப்பீட்டுத் துறை யில் நிறுவனங்கள் இணைவதற் கான வாய்ப்புகள் குறைவுதான்.

எப்படி குடும்பத்தையும் அலுவலக வேலையையும் சமன் செய்கிறீர்கள்?

நீங்கள் செய்யும் வேலையில் குடும்பம் பெருமை கொள்ள வேண்டும். எது முக்கியம் என்பதை குடும்பத்துக்கும் அலுவலகத்துக்கும் தெரியப்படுத்த வேண்டும். இது நேரம் சம்பந்தபட்ட விஷயம் அல்ல. காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரைக்கும் அலுவலகம். அதற்கு பிறகு குடும்பம் என்று நேரம் ஒதுக்க முடியாது. யாராவது அலுவலகத்துக்கு வந்த பிறகு தனிப்பட்ட வேலையை செய்வதே இல்லை என்று சொல்ல முடியுமா? எனக்குத் தெரிந்து அப்படி இருக்க முடியாது.

இப்போது என் குழந்தைகள் வளர்ந்து விட்டாலும், சில வருடங் களுக்கு முன்பு தினமும் 3.30 மணிக்கு குழந்தைகளுக்கு போன் செய்வேன் என்பது என் அலுவலக நண்பர்களுக்குத் தெரியும். அதேபோல சனிக்கிழமை எதாவது வேலை வந்தாலும் அதை செய்வேன். குடும்பத்திலும் கேள்வி கேட்க மாட்டார்கள். உங்கள் வேலையை குடும்பம் மதிக்க வேண்டும், உங்கள் குடும்பத்தை அலுவலகம் மதிக்க வேண்டும். அதை இரு இடங்களிலும் புரியவைக்க வேண்டும்.

நன்றி ‘தி இந்து’.