அந்நிய முதலீடுகளை வரவேற்கிறேன்: கே.இ.வெங்கடாசலபதி நேர்காணல்

மெகாமார்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கே.இ.வெங்கடாசலபதி

மல்டி பிராண்ட் ரீடெய்ல் வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் மெகாமார்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கே.இ.வெங்கடாசலபதி கடந்த வாரம் சென்னை வந்திருந்தார். அவரிடம் ரீடெய்ல் வணிகம், அந்நிய முதலீடு குறித்த பல விஷயங்களை பேசினோம். அந்த பேட்டியிலிருந்து..

சி.இ.ஓ.வாக இருப்பவர்கள் நிர்வாகவியல் படிப்பு படித்திருப்பார்கள். ஆனால் சி.ஏ. படித்து, சி.எஃப்.ஒ.வாக 15 ஆண்டுகளாக வேலை செய்திருக்கிறீர்கள். தலைமைப் பொறுப்பு ஏற்கும் போது உங்களுக்கு தயக்கம் இருந்ததா?

நான் டிபிகல் சி.எஃப்.ஓ.வாக மட்டுமல்லாமல் விற்பனையை எப்படி அதிகரிக்கலாம், இன்வெண்ட்ரியை எப்படி நிர்வகிக்கலாம் என்பதில் நாட்டம் கொண்டவன். மார்க்கெட்டிங் உள்ளிட்ட அனைத்து பிஸினஸ் மீட்டிங்குகளில் நான் இருந்திருக்கிறேன். இதற்கு என்னுடைய சி.இ.ஓ.வுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.

இந்த பயிற்சியில் பிஸினஸ் மீதான ஆர்வம் அதிகரித்தது. அதனால் தயக்கம் ஏதும் இல்லை. கடந்த சில ஆண்டுகளாக நிதிப்பிரிவில் கொஞ்சம் தொய்வு அடைந்துவிட்டேனோ என்று நினைக்கும் அளவுக்கு முழுநேர பிஸினஸ் ஆளாக மாறிவிட்டேன். மேலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் சி.கே.பிரகலாத், ராபின் ஷர்மா ஆகியோர் எழுதிய நிர்வாகவியல் புத்தகங்களை படித்து வருகிறேன்.

Louis Philippe, Van Heusen உள்ளிட்ட பிராண்டட் சட்டைகளை ஷோ ரூம் விலையை விட 50 சதவீத தள்ளுபடியில் உங்களால் எப்படி தர முடிகிறது?

நீங்கள் ஷோ ரூம் சென்று எடுப்பது புதிதாக அப்போதைய சீசனுக்கு வரும் சட்டைகள். உதாரணத்துக்கு 1,000 சட்டைகள் தயாரிக்கப்படுகிறது என்றால் இவை நேரடியாக முதலில் ஷோ ரூமுக்கு செல்லும்.

அங்கு 700 சட்டைகள் விற்கிறது என்றால் மீதமிருக்கும் சட்டைகள் மெகா மார்ட்டில் விற்கும். எங்களிடம் இருக்கும் டிசைன்கள் ஷோரூமில் இருக்காது, ஷோரூமில் இருக்கும் டிசைன்கள் எங்களிடம் இருக்காது. அதற்காக இந்த சட்டைகள் குறைபாடுஉடையவை என்றாகாது. இவை அந்த சீசனில் விற்காத சட்டைகள் மட்டுமே. ஆனால் இது போன்ற பிராண்ட்கள் மொத்த மெகாமார்ட்டில் 30 சதவீதம்தான். மீதம் 70 சதவீத சட்டைகள் அர்விந்த் நிறுவனத்தின் சொந்த பிராண்ட்கள். அவை புதியதாக தயாரிக்கப்பட்டு நேரடியாக விற்பனைக்கு வருபவை.

ஆரம்பத்தில் புத்தகங்கள் மட்டுமே ஆன்லைனில் அதிகம் வாங்கப்பட்டன. இப்போது துணி வகைகளும் ஆன்லைனில் அதிகம் வாங்கப்படுகின்றன. உங்களது விற்பனை பாதிக்கப்படுமே?

தற்போது ஆன்லைன் துணி விற்கும் நிறுவனங்களுடன் எங்களுடைய பிராண்ட்களும் இருக்கிறது. இதிலிருந்து கணிசமான வருமானம் வருகிறது. இருந்தாலும் இந்த நிதி ஆண்டின் இறுதியிலோ அல்லது அடுத்த நிதி ஆண்டின் ஆரம்பத்திலோ நாங்களே இணையதளம் மூலம் விற்பனையை கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம்.

நீங்களே ஆரம்பிக்கும்போது ஆன்லைன் வாடிக்கையாளர்களை பிடிக்க முடியும். ஆனால் நேரடியாக ஷோரூமுக்கு வரும் வாடிக்கையாளர்களை தக்க வைக்க என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்? ஆன்லைனில் வாங்கும்போது திட்டமிட்டு வாங்குவார்கள். நேரடியாக வாங்கும்போது தனியாக வரமாட்டார்கள். நேரடியாக வரும்போது அவர்கள் மூலம் கிடைக்கும் வருமானம் அதிகமாக இருக்குமே?

மொத்த சந்தையே ஆன்லைனாக மாறும் என்று நான் நினைக்கவில்லை. புதியதாக ஒரு வாய்ப்பு வரும்போது அதை பயன்படுத்துவார்கள். ஆனால் வார இறுதியில் மக்கள் வெளியே வந்துதானே ஆக வேண்டும். ஆனால், ஆன்லைன் வணிகம் அதிகரித்து வருகிறது என்பதையும் ஒப்புக்கொள்கிறேன்.

இந்திய துணி வணிகம் இன்னும் ஆரம்ப நிலையிலேயே இருக்கிறது. அமெரிக்கர்கள் ஓர் ஆண்டுக்கு துணி வாங்குவதில் எட்டில் ஒரு பங்குதான் இந்தியர்கள் வாங்குகிறார்கள். அதனால் ஆன்லைனால் பெரிய பாதிப்பு இருக்கும் என்று நினைக்கவில்லை.

ரியல் எஸ்டேட் விலை உயர்ந்து வருகிற இந்த சூழ்நிலையில் உங்களுடைய ஒரு ஷோ ரூம் பிரேக் ஈவன் ஆக எவ்வளவு காலம் ஆகும்?

இரண்டு வகையான பிரேக் ஈவன் இருக்கிறது. முதலாவது ஒரு ஷோ ரூமுக்கு ஆகும் செலவை (வாடகை, மின்சார செலவு, சம்பளம் உள்ளிட்டவை) அந்த ஷோ ரூமில் இருந்தே சமாளிப்பது. இதற்கு ஓரிரு மாதங்கள் ஆகும். மொத்தமாக அந்த ஷோ ரூமுக்கான முதலீட்டை எடுப்பதற்கு இரண்டு இரண்டரை வருடங்கள் ஆகும்.

மளிகை, காய்கறி, துணி வகைகள், பேஷன் என பலவகையான ரீடெய்ல் இருக்கிறது. மொத்தமாக ஒரே இடத்தில் அமைக்கும் திட்டம் இருக்கிறதா?

இல்லை. ஃபேஷன் ரீடெய்லர்ஸ் என்றுதான் நாங்கள் எங்களை பொசிஷன் செய்கிறோம். காய்கறி, மளிகை வாங்க வருபவரின் மனநிலையும், பேஷன் ஆடைகளை வாங்க வருபவரின் மனநிலையும் வேறு. இது இரண்டையும் இணைக்க முடியாது.

மல்டி பிராண்ட் ரீடெய்ல் துறையில் அந்நிய முதலீடு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

நிச்சயமாக அந்நிய முதலீட்டை வரவேற்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன்பு வங்கி, இன்ஷுரன்ஸ் துறையில் அந்நிய முதலீட்டை கொண்டு வர எதிர்த்தார்கள். ஆனால் இப்போதும் பொதுத்துறை வங்கிகள் சிறப்பாகத்தான் செயல்பட்டு வருகின்றன.

அந்நிய முதலீடு வரும்போது சிறப்பான சேவை, புதிய டெக்னாலஜிகள் கிடைக்கும். இதேபோல ரீடெய்ல் துறையில் அந்நிய முதலீடு இந்த துறையை மேலும் வலுவானதாக்கும்.

ரிடெய்ல் துறையில் பணிபுரியும் பணியாளர்களின் பணிச்சூழல் வசதியாக இல்லையே. உங்களைப் போன்ற பெரிய நிறுவனங்கள் ஏதாவது செய்யலாமே?

இப்போதைய வாடகையில் ஒரு ஸ்டோரில் 10 சதவீத இடம் பணியாளர்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. மற்ற துறையைப் போல இவர்களுக்கு எட்டு மணி நேர வேலைதான்.

மேலும், இவர்கள் பெரும்பாலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு படித்தவர்கள்தான். இவர்கள் அடுத்த நிலைக்குச் செல்ல வேண்டும் என்றால் கல்வி முக்கியம். அதற்காக அவர்களுக்கு ஸ்காலர்ஷிப் கொடுக்கிறோம்.

படித்து முடித்தவுடன் இங்கேயே அவர்களுக்கு அடுத்தகட்ட வளர்ச்சி இருக்கிறது. ரீடெய்ல் அதிக லாபம் கொடுக்கும் துறை அல்ல. அதனால் மற்ற நிறுவனங்களை விட அதிக சம்பளம் கொடுக்க முடியாது. ஆனால் அவர்களின் செயல்பாடுகளை பொறுத்து அதிக இன்சென்டிவ் வழங்குகிறோம்.

நன்றி ‘தி இந்து