ஆட்டோமொபைல் துறையில் 30 ஆண்டுகளுக்கு மேலான அனுபவம் இருக்கிறது. ஆனால் இதுவரை இல்லாத அளவுக்கான சவால்கள் இந்த துறை தற்போது சந்தித்து வருகிறது என்கிறார் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பவன் கோயங்கா. இந்த நிறுவனத்தின் கேயூவி 100 என்எக்ஸ்டி என்னும் புதிய மாடல் காரின் அறிமுகம் கடந்த வாரம் மும்பையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பேசிய கோயங்கா, ஆட்டோமொபைல் துறையின் சவால்கள் குறித்து பேசினார். புதிய காரின் தகவல்கள் குறித்து நிறுவனத்தின் மற்ற உயரதிகாரிகள் விளக்கினாலும் ஒட்டு மொத்த துறை சந்தித்து வரும் சவால்கள் குறித்து மட்டுமே கோயங்கா அந்த நிகழ்ச்சியில் பேசினார்.

பெட்ரோல் காருக்கான தேவை உயருவது முதலாவது சவால். தற்போதைய சூழலில் டீசல் கார்கள் சுற்றுச்சுழலுக்கு கேடு என்பது போன்ற தோற்றம் உருவாக்கப்பட்டிருப்பதால் ஒட்டுமொத்த துறையில் பெட்ரோல் கார் பிரிவினை நோக்கி நகர்ந்து வருகிறது. அடுத்தது வாடிக்கையாளர்களின் தேவை. முன்பு ஒரு கார் வாங்க வேண்டும் என்பதே வாடிக்கையாளர்களின் தேவையாக இருந்தது. ஆனால், தற்போதைய தேவை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. வாடிக்கையாளார்களின் தேவையை பூர்த்தி செய்யவும் அவர்களை தக்கவைத்துக்கொள்ளவும் தொடர்ந்து புதுமைகளை புகுத்த வேண்டி இருக்கிறது. குறைந்த விலையில் அனைத்து விதமான தொழில்நுட்ப வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டி இருக்கிறது.

மூன்றாவது டிரைவர் இல்லாத தொழில்நுட்பம். இப்போதைக்கு இந்தியாவுக்கு வரும் என்று சொல்ல முடியாவிட்டாலும் டிரைவர் இல்லாத வாகன சோதனை உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. எங்களுடைய டிராக்டர் பிரிவில் டிரைவர் இல்லாத டிராக்டர் சோதனை நடைபெற்று வருகிறது. இவை இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. இந்த சோதனை முயற்சிகளை அடிப்படையாகக் கொண்டு டிரைவர் இல்லாத கார்களை உருவாக்க திட்டமிட்டிருக்கிறோம்.

நான்காவதாக வாகனங்களை பகிர்ந்து கொள்வது முக்கிய சவாலாக இருக்கிறது. அதாவது ஒரு வாகனத்தை பலர் பகிர்ந்து கொள்வது. ஐந்தாவதாக எலெக்ட்ரிக் வாகனங்கள் பெரும் சவாலாக இருக்கிறது என்று கூறிய கோயங்கா, எலெக்ட்ரிக் வாகனங்கள் குறித்து கொஞ்சம் விரிவாகவே பேசினார். 2030-ம் ஆண்டுக்குள் அனைத்து வாகனங்களையும் எலெக்ட்ரிக் வாகனங்களாக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. ஆனால் 2030-ம் ஆண்டு என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. 20 சதவீதம் மட்டுமே எலெக்ட்ரிக் வாகனங்களாக மாறுமா அல்லது 100 சதவீதமும் எலெக்ட்ரிக் வாகனங்களாக மாறுமா என்பது தெரியாது. ஆனால் இதற்கு மஹிந்திரா தயாராக இருக்கிறது. அடுத்த ஆண்டில் கேயூவி 100 மாடலில் எலெக்ட்ரிக் கார் அறிமுகப்படுத்தப்படும்.

அதே போல ஹைபிரிட் கார்களுக்கு எதிர்காலம் இருக்குமா அல்லது முடிவடையுமா என தெரியவில்லை.ஹைபிரிட் கார்களுக்கு பல நிறுவனங்கள் அதிகம் செலவு செய்திருக்கின்றன. ஆனால் இந்த வகை கார்களுக்கு ஜிஎஸ்டி வரி அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. பல வழிகளில் இந்த துறை செல்கிறது. அதற்கான அனைத்து துறைகளிலும் முதலீடு செய்ய முடியாது, அனைத்து வழிகளையும் தவிர்க்கவும் முடியாது. யோசித்து முடிவெடுக்க வேண்டும் என்று கோயங்கா பேசினார்.

ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அடுத்தகட்ட மாற்றத்துக்கு தங்களை தயார்படுத்தி வருகின்றன என்பது மட்டும் தெளிவாக புரிகிறது.