இந்தியாவில் பட்டியலிடப்படாத இரண்டு தனியார் வங்கிகளில் கத்தோலிக் சிரியன் வங்கியும் ஒன்று. சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த வங்கியை பட்டியலிடுவதற்காக தொடங்கப்பட்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. அதுமட்டுமின்றி, வங்கியின் நிதி நிலைமையும் சரியாக இல்லை.

வங்கியின் பங்குகளை வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர் வாங்கியதைத் தொடர்ந்து ஏற்பட்ட சிக்கல் சில ஆண்டுகளுக்கு நீடித்தது. அந்த சிக்கல் முடிந்து தற்போது ரிசர்வ் வங்கி அனுமதியுடன் கனடாவில் வசிக்கும் வெளிநாடு வாழ் இந்தியரான பிரேம் வாட்சா (பேர்பாக்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத் தலைவர்) இந்த வங்கியில் 51 சதவீத பங்குகளை வாங்க முடிவு செய்துள்ளார். இந்நிலையில், கடந்த வாரம் சென்னை வந்திருந்த கத்தோலிக் சிரியன் வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் சிவிஆர் ராஜேந்திரன் அளித்த சிறப்புப் பேட்டி:

ஆந்திரா வங்கியில் தலைமைச் செயல் அதிகாரியாக  பணியாற்றி ஓய்வுபெற்ற பிறகு இந்தியமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களின் சங்கத்தின் (ஆம்பி) தலைமைச் செயல் அதிகாரியாகபதவி வகித்த நீங்கள்,  குறுகிய காலத்தில்  அங்கிருந்து வெளியேறக் காரணம் என்ன?

மியூச்சுவல் பண்ட் சங்கத்தில் பெரும்பாலான வேலை என்பது ஆலோசனை அளவில்தான் இருக்கும். வங்கித் துறையில் பல ஆண்டுகள் பணியாற்றியபிறகு ஆலோசனைகளை மட்டுமே செய்து கொண்டிருக்க வேண்டாம் என்று தோன்றியது. அப்போதுதான் எனக்கு இந்த வாய்ப்பு வந்தது. கனடா சென்று பிரேம் வாட்சாவை சந்தித்தேன். வங்கியின் வளர்ச்சிக்கு என்ன செய்யவேண்டும், எவ்வளவு முதலீடு தேவை என்பது குறித்த திட்டமிடல் அவருக்குத் தெளிவாக இருந்தது. அதனால் வங்கியின் தலைமைப் பொறுப்பை ஏற்க சம்மதித்தேன்.

இது சிறிய வங்கிஏற்கெனவே பல தலைமைச் செயல் அதிகாரிகள் வங்கியில் இருந்துவெளியேறி விட்டனர். நீங்கள் எந்த அடிப்படையில் பொறுப்பை ஏற்றிருக்கிறீர்கள்?

வங்கியை மீண்டும் நல்ல நிலைமைக்குக் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆர்பிஎல் வங்கியை நல்ல நிலைமைக்கு அந்த நிர்வாகம் கொண்டு வந்துள்ளது. அதேபோல இண்டஸ்இந்த் வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியாக ரமேஷ் சோப்தி பொறுப்பேற்ற பிறகு வங்கியை முற்றிலும் மாற்றி அமைத்தார். அதுபோல இந்த வங்கியையும் மாற்ற முடியும் என்ற எண்ணம் தோன்றியது.

இதற்கிடையே, சென்னையைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் சிலர் என்னிடம் வந்து ‘வங்கி தொடங்கலாமா’ என்று கேட்டனர். அதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராய்ந்தோம். தற்போதைய சூழலில் ஓரளவுக்கு மேல் டெபாசிட்களை திரட்ட முடியாது என்பதை உணர்ந்தோம். அதனால், அந்த யோசனை கைவிடப்பட்டது.

ஆனால், கத்தோலிக் சிரியன் வங்கியின் பிராண்ட் மீது மக்களுக்கு நம்பிக்கை இருந்தது. 97 ஆண்டுகளாக இந்த வங்கி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளைத் தவிர பெரிய அளவில் நஷ்டத்தை சந்திக்கவில்லை. பொதுத்துறை வங்கிகளுக்கு இணையாக வட்டி விகிதங்களைக் குறைத்த போதிலும் வங்கியின் டெபாசிட்கள் குறையவில்லை. பல பிரச்சினைகளுக்கு இடையேயும் வாடிக்கையாளர்களின் ஆதரவு இருப்பதால் வங்கியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லலாம் என்ற நம்பிக்கையுடன் பொறுப்பை ஏற்றுள்ளேன்.

ஒரு காலத்தில் சிறப்பாகச் செயல்பட்ட இந்த வங்கியில் எப்போது பிரச்சினை தொடங்கியது?

1990-ம் ஆண்டுகளில் சிறப்பாகச் செயல்பட்ட தனியார் வங்கிகளில் இதுவும் ஒன்று. 1994-95-ம் ஆண்டில் வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர் இந்த வங்கியில் 36 சதவீத பங்குகளை வாங்கினார். சம்பந்தப்பட்ட நபரின் பெயரில் பங்குகளை மாற்றுவதற்கு ரிசர்வ் வங்கி ஒப்புக்கொள்ளவில்லை. வெளிநாடு வாழ் இந்தியர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு 15ஆண்டுகளுக்குமேல் நீடித்தது.

இந்த வழக்கு காரணமாக நிதி திரட்ட முடியாத நிலை ஏற்பட்டதால் வங்கியில் விரிவாக்கப் பணி நடக்கவில்லை. பங்குகளை வாங்கிய வெளிநாடு வாழ் இந்தியரால் இயக்குநர் குழுவில் அமர முடியவில்லை.ஆனால், பங்குகளை விற்றவர்கள் இயக்குநர் குழுவில் இருந்தனர். இதனால் ஏற்பட்ட குளறுபடிகளால் வங்கியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல முடியவில்லை.

இந்தப் பிரச்சினை 2008-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. அதன்பிறகு அந்த நபர் தான் வாங்கிய பங்குகளை வெளிச் சந்தையில் விற்கத் தொடங்கினார். கடந்த ஆண்டில்தான் அவரால் முழுமையாக வெளியேற முடிந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு நெருக்கடியில் இருந்த கத்தோலிக் சிரியன் உட்பட 2 வங்கிகளுக்கு மட்டும் ரிசர்வ் வங்கி சிறப்பு அனுமதி கொடுத்தது.பொதுவாக வங்கியில் 5 சதவீத பங்குகளுக்கு மேல் தனி நபர் வைத்துக்கொள்ள முடியாது. ஆனால், இரு வங்கிகளில் மட்டும் 51 சதவீதம் பங்குகளை தனியார் வைத்துக்கொள்ள அனுமதி வழங்கப் பட்டது.

பிரேம் வாட்சாவின் முதலீடு வங்கிக்கு எப்போது கிடைக்கும்?

பிரேம் வாட்சாவின் முதலீடு வந்த பிறகுதான் வங்கிப் பொறுப்பை ஏற்கவேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால், இந்த வங்கியில் நான் பொறுப்பேற்க இருக்கும் தகவல் ஊடகங்களில் வெளியாகிவிட்டது. அதன்பிறகு மியூச்சுவல் பண்ட் சங்கத்தின் பணியில் இருப்பது நல்லதல்ல என்பதால் உடனடியாக இங்கு வந்துவிட்டேன்.

பங்குகளை மதிப்பிடுவதில் உள்ள கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரேம்வாட்சா அப்போது முதலீடு செய்யவில்லை. அதனால், கியூஐபி முறையில் நிதி திரட்ட முடிவெடுத்தோம். 30-க்கும் மேற்பட்ட பெரிய முதலீட்டாளர்களை சந்தித்தோம். ஆனால், முதலீட்டாளர்கள் ஒன்றாக இணைந்து செயற்கையாக பங்குகளின் விலையைக் குறைக்கிறார்களோ என்ற சந்தேகம் இருந்தது. பிரேம்வாட்சா நிர்ணயம் செய்த விலையைவிடக் குறைவாக இவர்கள் கேட்டனர்.

அதனால், மீண்டும் பிரேம் வாட்சாவுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என இயக்குநர் குழு முடிவு செய்தது. பேர்பாக்ஸ் நிறுவனமும் இதற்கு ஒப்புக்கொண்டது. ரிசர்வ் வங்கி அனுமதிக்காக காத்திருக்கிறோம். இன்னும் சில வாரங்களில் முதலீடு கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது.

உங்களின் அடுத்து இலக்கு என்ன?

எந்த மாற்றத்தையும் காலாண்டு அடிப்படையில் கொண்டுவர முடியாது. 2 ஆண்டுகளுக்கு பிறகே நாங்கள் எடுக்கும் நடவடிக்கைகளின் மீதான மாற்றம் தெரியவரும். பெரிய அளவில் வங்கியை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளோம். தற்போது 416 கிளைகள் இருக்கின்றன. அடுத்த 4 ஆண்டுகளில் இதை 1,000 கிளைகளாக உயர்த்த இருக்கிறோம். ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கும் எங்களின் மொத்த வணிகத்தை இரு மடங்காக உயர்த்தவும் திட்டமிட்டுள்ளோம். தற்போது ரூ.25 ஆயிரம் கோடி அளவுக்கு வணிகம் (டெபாசிட் + கடன்) இருக்கிறது. அடுத்த 3 ஆண்டுகளில் இதை ரூ.50 ஆயிரம் கோடியாக உயர்த்த இலக்கு வைத்துள்ளோம். பல தனியார் வங்கிகள் இதே அளவிலான வளர்ச்சியை அடைந்திருக்கின்றன. எங்களாலும் இந்த வளர்ச்சியை அடைய முடியும்.