`முடிவெடுக்க எங்களுடைய தகவல்கள் பயன்படும்’

நிறுவனங்கள் பற்றிய தகவல்களைக் கொடுக்கும் நிறுவனம் டன் அண்ட் பிராட்ஸ்ட்ரீட். உலகளவில் அதிக தகவல்களை வைத்திருக்கும் நிறுவனம் இது. 100 வருடங்களுக்கு மேலாக அமெரிக்க பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுள் இதுவும் ஒன்று. இந்த நிறுவனத்தின் துணை நிறுவனமான டன் அண்ட் பிராட்ஸ்ட்ரீட் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கணேஷ் சேதுராமனை சென்னையில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தோம். அவருடனான உரையாடலில் இருந்து.

தந்தை அரசு ஊழியர் என்பதால் டெல்லியில் வளர்ந்தவர். கர்நாடகாவில் இருக்கும் ஆர்இசியில் இன்ஜினீயரிங்கும், ஐஐஎம் அகமதாபாத்தில் நிர்வாக படிப்பும் படித்தவர். அதன் பிறகு சிட்டி வங்கியில் பணிபுரிந்தார். அப்போது அவருடைய நண்பர் புதிய நிறுவனம் தொடங்கியபோது அந்த நிறுவனத்தில் 4 வருடங்கள் பணிபுரிந்தார். அதன் பிறகு பிரான்சை சேர்ந்த சொசைட்டி ஜென ரேல் (societe generale) வங்கியில் 7 வருடங்கள் பணியாற்றியவர் இப்போது டன் அண்ட் பிராட்ஸ்ட்ரீட் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருக்கிறார்.

ஸ்டார்ட்அப் இந்தியா இப்போது பிரபலமான வாசகம். ஆனால் நீங்கள் ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் இணைந்த போது அதற்கான சூழல் இருந்ததா? ஏன் புதிய நிறுவனத்தில் இணைந் தீர்கள்?

பலரும் இப்போதுதான் புதிய நிறுவனங்கள் தொடங்கப்படுவதாக நினைக்கின்றனர். ஒவ்வொரு காலத் திலும் புதிய புதிய நிறுவனங்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இப்போது வென்ச்சர் கேபிடல் நிதி கிடைக்கிறது. ஆனால் அப்போது அப்படி அல்ல.

சிட்டி வங்கியில் இருக்கும் போது பல வாய்ப்புகள் வந்தன. ஆனாலும் ஏதாவது தொழில் தொடங்க வேண் டும் என்ற எண்ணம் இருந்துக் கொண்டே இருந்தது. அதே வேளை யில் என்னுடைய மேலதிகாரியும் ஒரு நிறுவனம் தொடங்க இருக்கிறேன் என்று அழைத்தார். தவிர ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் இலக்கை விட பயணம் மூலம் கற்றுக் கொள்வதுதான் முக்கியம் என்று நினைத்தேன்.

தவிர நானே தொடங்குவதை விட என்னுடைய மேலதிகாரி உடன் பணிபுரியும் போது அவருடைய அனுபவமும், என்னுடைய வேகமும் இணைந்தால் நிறுவனம் மேலும் விரிவடையும் என்று நினைத்தேன். அந்த காலத்தில் பார்த்தீர்கள் என் றால் பெரும்பாலான நிறுவனங்கள் `அண்ட் சன்ஸ்’ என்றுதான் தொடங் கப்பட்டிருக்கும். அதாவது அப்பா வும் மகனும் சேர்ந்து கவனித்துக் கொள்வார்கள் எனும் போது மக்க ளிடையே நம்பிக்கை உருவாகும். அதுபோலதான் இதுவும்.

சிட்டி வங்கியில் பணிபுரிந்த அனுபவமும் உள்ளது. ஸ்டார்ட்அப் நிறுவனத்திலும் பணியாற்றியுள்ளீர் கள். அதற்கு பிறகு நீங்களே ஒரு நிறுவனம் தொடங்கியிருக்கலாமே?

இப்போது யோசிக்கும்போது ஒரு நிறுவனம் தொடங்கி இருக்க லாம் என்று தோன்றும். ஆனால் அப்போதைய சூழ்நிலையில் எனக்கு ஒரு நிலைத்தன்மை தேவைப்பட்டது. அந்த இரண்டு பணிகளுக்கு பிறகு நான் இணைந்த பிரான்ஸ் வங்கி ஸ்டார்ட்அப் என்று சொல்ல முடியாவிட்டாலும், மிகவும் சிறிய வங்கி.

நிறுவனங்கள் பற்றிய தகவல்கள் இப்போது கிடைப்பது எளிது. ஆனால் சில பத்தாண்டுகளுக்கு முன்பு எப்படி சேகரித்தீர்கள்?

நிறுவனங்களுக்கு நேரடியாக சென்று, அவர்களை சந்தித்துதான் தகவல்களை பெற முடியும். தவிர பொது தளங்களில் தகவல்கள் இருக்கும். உதாரணத்துக்கு கம்பெனி பதிவாளர் போன்ற அமைப்புகள் ஒவ்வொரு நாடுகளிலும் இருக்கும். புத்தகங்கள் உள்ளிட்ட இடங்களில் இருந்து தகவல்கள் கிடைக்கும். முன்பெல்லாம் தகவல்கள் கிடைப்பது கடினமான வேலை. இப்போது தகவல்கள் கொட்டி கிடக்கின்றன. ஆனால் இதில் எது உண்மை என்று கண்டறிவது கடினமாக இருக்கிறது.

இந்த இடத்தில் இரண்டு கேள்விகள் தோன்றுகின்றது. ஒரு நிறுவனம் ஏன் உங்களிடம் தகவல்களைக் கொடுக்க வேண்டும். பொதுவெளியில் தகவல்கள் கொட்டி கிடக்கும் போது உங்களிடம் இருந்து யார் தகவல்களை பெறுகிறார்கள்?

எங்களுக்காகக் கொடுக்கத் தேவை இல்லை. யாரிடமாவது நிறுவனங்கள் தகவல்களை பகிர்ந்துகொள்ளத்தானே வேண் டும். இந்தியாவை எடுத்துக் கொண்டால் சட்டப்படி கம்பெனி பதிவாளரிடம் நீங்கள் தகவலைக் கொடுத்துதான் ஆக வேண்டும். பட்டியலிடப்பட்ட நிறுவனங்களும் பங்குச் சந்தைக்கு தகவல் கொடுக்க வேண்டுமே. இதுபோல பல அமைப்புகளிடம் ஒப்பந்தங்கள் மூலம் தகவல்களைப் பெறுகிறோம்.

எங்களிடம் தகவல்கள் வாங்குபவர்கள், ஒரு குறிப்பிட்ட நிறுவனங்களைப் பற்றி வாங்குவதில்லை. துறை பற்றிய தகவல்கள், அல்லது இந்த துறையில் இந்த இடத்தில் எவ்வளவு நபர்கள் இருக்கிறார்கள் என்பது போல மொத்த தகவல்களை அவர்களது தொழில் விரிவாக்கத்துக்காக வாங்குவார்கள். இந்தியாவில் பிரச்சினை இல்லை. உதாரணத்துக்கு ஐரோப்பாவை எடுத்துக்கொண்டால் வெளிநாடுகளில் பொருட்கள் வாங்குவது அதிகம். அவர்களுக்கு வெளிநாடுகளில் எந்த நிறுவனம், எங்கு செயல்படுகிறது என்ற தகவல்கள் தேவை. பெயின்ட் நிறுவனம் தமிழ்நாட்டுக்கு வருகிறது என்றால் ஒவ்வொரு நகரங்களிலும் எவ்வளவு கட்டுமான நிறுவனங்கள் இருக்கின்றன என்பது குறித்த தகவல்கள் தேவை. எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் நிறுவனங்கள் முடிவெடுப்பதற்கு எங்களுடைய தகவல்கள் பயன்படும்.

அனைத்து நாடுகளிலும் தகவல்கள் பெறுவது எளிதாக இருக்கிறதா?

சில நாடுகளில் 100 சதவீத தகவல்கள் கிடைக்கின்றன. சில நாடுகளில் தகவல்களுக்கு தேவையே இல்லை. சில நாடுகளில் பல சிக்கல்கள் இருக்கின்றன.

எங்கள் நிறுவனத்தின் செய்தியை நீங்கள் பின் தொடர வேண்டாம் என்று சொல்வதற்கு நிறுவனங்களுக்கு உரிமை இருக்கிறதா?

தனி மனிதர்கள் இப்படிச் சொல்வதற்கு சட்ட உரிமை இருக்கிறது. ஆனால் நிறுவனம் என்பது சட்டத்தின்படிதான் பதிவு செய்யப்படுகிறது. அதனால் நிறுவனங்கள் இப்படிச் சொல்ல முடியாது. நீங்கள் ஒரு நிறுவனத்தை பதிவு செய்து, நான் என்ன செய்கிறேன் என்பதை பொதுவெளியில் தெரிவிக்க முடியாது என்று நீதிமன்றம் செல்ல முடியாது. உதாரணத்துக்கு வங்கி உள்ளிட்ட கட்டுப்பாட்டு அமைப்புகளுக்கு உங்கள் நிறுவனத்தில் என்ன நடக்கிறது என்று தெரியவேண்டும்.

நன்றி : தி இந்து